பிரபஞ்சம் பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

The Intellectual Rule Book
இந்த நூலில் இடம்பெற்றுள்ள கேள்விகளை உங்கள் ஆசிரியர்களிடம் கேட்டுவிடாதீர்கள்! ஆசிரியர்கள் ஓட்டம் பிடித்து விடுவார்கள்! Download

 

universe

பிரபஞ்சம் ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
5. அத‌ன் உருக்க‌ள் எவை?
6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?
இவைகளிலெதையும் அறிந்திருக்காதவன் பிரபஞ்சம் பற்றி அறிவேதுமில்லாதவன்.

[The Expected Knowledge    ஞானசூத்திரம்]

பிரபஞ்சம் ப‌ற்றி ஒருவ‌ன் கூற‌விருப்ப‌வை:
அது பாக‌ம் பாக‌மாக‌ப் ப‌குப‌ட‌க்கூடிய‌ ஒன்றாகும்.
அதிலிருப்ப‌து ஏனைய‌வைக‌ளிலும் இருக்கிற‌து.
அது ஏனைய‌வைக‌ளோடு இணைந்து தொட‌ர்பில் இருக்கிற‌து.
அது ஏனைய‌வைக‌ளால் பாதி‌ப்ப‌டைகிற‌து. அதுவும் ஏனைய‌வைகளைப் பாதிக்கிற‌து.
அது ஒரே உருவில் நிலையாக‌ நில்லாமல் அத‌ன் பிற‌ உருக்க‌ளுக்குத் தொட‌ர‌க்கூடிய‌து.
அத‌ற்குப் ப‌திலாக‌ மாற்றுகள் இருக்கின்ற‌ன‌.
அது ப‌ய‌ன‌ற்ற‌ ஒன்ற‌ல்ல‌, தேவையான‌ ஒன்றாகும்.

பிரபஞ்சம் பற்றி பள்ளி கல்லூரிகளில் பயின்றவன் கூறவிருப்பவைகளில் எவை பள்ளி கல்லூரிகளில் பயிலாதவனால் கூறமுடியாதவைகள்?

idli

2832408373_da6de471ae

Downloads:
எப்பொருளையும் பற்றிய‌ உன் அறிவு எதிர்பாராத‌த‌ல்ல‌!
The Expected Knowledge
The Knowledge Expansion Manual

About Sivashanmugam Palaniappan

ஒன்றுமில்லாமல் ஒன்றுமிருக்காது! ஒன்றை முழுமையாக அறிந்துகொள்ள அதன் பாகங்களை மட்டும் அறிந்தால் போதாது; அதன் தனித்தன்மைகளையும், தொடர்புகளையும், தாக்கங்களையும், திரிவுகளையும், பயன்களையும், மாற்றுக்களையும் அறியவேண்டும். ~ சிவஷண்முகம்
This entry was posted in Uncategorized and tagged , , , , , , , , . Bookmark the permalink.

11 Responses to பிரபஞ்சம் பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

  1. பூரணவல்லி says:

    நம்முடைய பிறந்த நாளை நம்முடைய பெற்றோர்கள் கூறித்தான் நமக்குத் தெரியும். இது போலவே, அவர்களின் பிறந்தநாளை அவர்களது பெற்றோர் கூறி அவர்களுக்குத் தெரியும்.
    இப்படியே கூறிக்கொண்டே போகலாம். என்றாலும், நமது மூதாதையர்களைப் பற்றிய வரலாற்றை இரண்டு அல்லது மூன்று தலைமுறைக்கு மேல் நாம் அறிந்திருக்க முடியாது!
    நமது மூதாதையர்களுக்கும் முன்னோடியாக குரங்கு இனம் இருந்து வந்ததாக அறிவியல் கூறுகிறது. (சார்லஸ் டார்வின் தமது ஆய்வில் குறிப்பிடுகிறார்) இதையே நாம் ஒப்புக்கொண்டு மேலும் விவரங்கள் அறிய முற்படுவோமேயானால்:
    இவர்கள் காலத்திற்கும் முன்னால் நமது உயிர்த்தோற்றம் அமீபாக்கள் என்று கூறப்படும் சின்னஞ்சிறு உயிர்களில் தோன்றி, காலப்போக்கில் இரு கால்களும், அவற்றில் பத்து விரல்களும், இவைகளை இயக்கும் நரம்புத் தொடர்களும், இவைகளின் மூலம் இயக்கப்படும் ஒரே ஒரு மூளையும், இந்த மூளையில் அடங்கப்பெற்ற செல்களைத் துளைத்தெடுக்கும் பல்வேறு கேள்விகளும், அதற்குப் பதில்களும் கூறக்கூடிய மனித இயந்திரமாக இன்று மனிதன் உருவகப்பட்டிருக்கிறான்.
    பிரபஞ்சத்தில் நிகழப்பெற்ற எந்த ஒரு கேள்விகளுக்கும் – பிரச்சினைகளுக்கும் பதில் கூறும் ஒரே ஒரு உயிர் “மனிதன்” மட்டும்தான் என்பதை பெருமையோடு ஒப்புக்கொள்வோம்.
    இன்று நம் முன்னே தோன்றப்படும் எந்த ஒரு பொருளை எடுத்துக்கொண்டாலும் அது எப்படித் தோன்றியது என்ற வினா எழுப்பி, அதற்குப் பதில் கூறும் நிலையில் இன்று அறிவியலில் வளர்ந்திருக்கிறான் மனிதன்.
    அந்த அடிப்படையில் இப்பிரபஞ்சப் பொருட்களின் தோற்றம் எப்படித் தோன்றியது? என்று பல்வேறு அறிஞர் பெருமக்கள் தமது ஆராய்ச்சி மூலம் கருத்துகளை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
    அந்தக் கருத்துகளை இங்கே பகிர்ந்து கொள்வதுடன், நமது கருத்துகளையும் முன்வைக்க கடமைப்பட்டுள்ளோம்.
    பிரபஞ்சம் உருவான கட்டத்தில் மிகப் பெரிய வெடிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்; அப்படி ஏற்பட்ட வெடிப்பின் மூலம் சிதறி ஓடப்பெற்ற பொருட்கள் இந்த நிமிடம் வரை விண்வெளியில் தொடர் ஓட்டமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று கூறுகிறார் பெல்ஜிய வான ஆராய்ச்சியாளர் ஷேர்த் லேமாத்ரே (Georges Lemaitre) என்ற அறிஞர்.

    நினைத்துப் பார்க்க முடியாத அமுக்கத்தில்; அதாவது, ஒரு தேக்கரண்டி அளவுள்ள பொருள் கிட்டத்தட்ட 10 கோடி டன் எடையுள்ளதாக இருந்தால் எந்த அளவுக்கு அமுக்கம் நிறைந்திருக்குமோ அந்த அளவு திணிவு கொண்ட பொருளாக இருந்து, “பெரும் டமார்” என்ற சத்தத்துடன் வெடித்துச் சிதறியிருக்க வேண்டும்; என்று கூறும் அவர்,
    இந்நிகழ்வு ஏற்பட்டு கிட்டத்தட்ட எழுநூறு கோடி ஆண்டுகள் கடந்திருக்கும் என்கிறார்.

    பிரபஞ்சம் மேலும் மேலும் பெரிதாகி வரும் நிகழ்வினை கவனிக்கிற போது, அது புறப்பட்ட ஆரம்பம் என்று ஒன்று இருந்து அதிலிருந்து தொடர் ஓட்டமாக விரிந்துகொண்டே செல்கிறது என்று கூறுகிறார்.
    பிரபஞ்சம் உருவாகி எழுநூறு கோடி ஆண்டுகள் இருக்கலாம், என்ற இக்கருத்தில் சில தவறுகள் தொக்கிக் கொண்டிருக்கின்றன.
    ஒரு ஆண்டு என்பதே பூமியின் 365 சுற்றுக்களுக்குள் நிறைவடையும் ஒரு அலகு. பொருள் வெடித்து, அது சிதறி ஓடி, ஓடிய பாதையில் ஆங்காங்கே நட்சத்திரங்களாகவும், கிரகங்களாகவும் இடம் பெற்று அது தன்னைத் தானே சுற்றிக்கொண்டதில் கணிக்கப்பட்டது தான் நமது பூமியின் தோற்றம். ஒரு ஆண்டு கணக்கு.
    பூமியின் 365 சுழற்சி கொண்டதுதான் ஒரு வருடம் என கணக்கிட்டு, அதை நமது நடைமுறைக்கு வழமையாக்கி வருகிறோம்.
    எனவே இந்தச் சுழற்சி கணக்கீட்டின் மூலம் பிரபஞ்சத் தோற்றம் ஏற்பட்ட காலக்கணக்கை வகைப்படுத்துவது என்பது எப்படிப் பொருந்தும்? எனவே,
    இக்கருத்து சரியானது இல்லை.
    திணிவு மிக்க மொத்தை உருவம் ஒன்று வெடித்துச் சிதறி, ஓடியதின் தொடரில் தான் பிரபஞ்சப் பொருள் அனைத்தும் உருவாகியிருக்க வேண்டும் என்ற இக்கருத்து அமெரிக்கப் பவுதீக விஞ்ஞானி ஜார்ஜ் காமோவ் (George Gamow) என்பவரும் ஒப்புக்கொள்கிறார்.
    * இன்று காணப்படும் பிரபஞ்சப் பொருள் அனைத்தும் அடர்த்திக்கொண்ட மொத்தையாக ஒரு கட்டத்தில் இருந்திருக்கிறது.
    * இந்த மொத்தை 2500 கோடி டிகிரி பாரன்ஹைட் வெப்பத்தில் வெடித்துச் சிதறியிருக்கிறது.
    *வெப்ப நிலை 50 லட்சம் டிகிரி பாரன்ஹைட்டாகக் குறைந்து மூலகங்கள் உருவாகி இருக்கிறது.
    * வாயு நிலையில் இந்த பொருட்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து, ஈர்த்து, முகில்களாகப் பிரியச் செய்து நட்சத்திரங்களாகவும், கிரகங்களாகவும் உருப்பெற்றிருக்கின்றன என்ற இக்கருத்தை ஜார்ஜ் காமோவும் ஒப்புக்கொள்கிறார்.
    மேற்கண்ட இக்கருத்தின் மூலம், பரிணாம வளர்ச்சியின் பல படிக்கட்டுகளை கடந்து இன்று, ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளுக்குப் பதில் கண்டுபிடிப்பவர்களாக இருக்கிறோம்.
    பெரும் பிண்டம் வெடித்துச் சிதறியதன் மூலம் அண்டங்கள் விரிவடைகின்றன என்ற கருத்தை ஒப்புக் கொள்வதாக இருந்தால், வெடித்துச் சிதறியதற்கு முந்தைய கட்டம் மற்றும் ஆரம்ப இடம் எங்கிருக்கிறது என்ற வினா எழுகிறது.
    தவிர, வெடிப்புக்கு முந்தைய கட்டத்தில் விண்வெளி முழுமையும் வெறும் வெற்றிடமாக இருந்ததா? அவை வெடித்துச் சிதறி ஓடும் பாதைகளில் தடுப்பலைகள் இருந்து அதையும் கடந்து சென்றனவா என்பன போன்ற நியாயமான கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்கின்ற இடத்திலே இருக்கிறோம். வேறு சில விஞ்ஞானிகள் தூசுப் படலம் தோன்றி, காலப் போக்கில் அவைகள் ஒன்றோடொன்று திரண்டு, திரட்சிகளாகி அதுவே, நட்சத்திரங்களாகவும், கிரகங்களாகவும் உருப்பெற்றிருக்கலாம் என்ற கருத்தை முன் வைக்கின்றனர்.
    அறிவியல் வளர்ச்சியின் வேகம் புதிர்களுக்கு விடை காண்பதுதான் என்பதிலே பெருமை கொள்வோம்.

  2. சௌந்தரபார்வதி says:

    பிரபஞ்சம் என்பது ஒரு அதி அடர்த்தியான பந்து போலத்தான் முதலில் உருவானதாகக் கருதப்படுகிறது. இந்த அடர்த்தியான ‘பிரபஞ்ச முட்டை’ (Cosmic egg) தான் படுபயங்கரமான ஒரு வெடிப்பினால் அப்படியே விரிவடைந்து, இப்போது நாம் காணும் பிரபஞ்சமாக உருவாகியுள்ளது. இந்தக் கருத்தை முதலில் கூறியவர் பெல்ஜிய நாட்டு வானியல் வல்லுனர் ஜார்ஜ் லமாய்டர் (Georges Lemaitre) என்பவர் தான். இப்படி ஒரு சிறிய அதி அடர்த்தியான உடல் வெடித்து அதனால் பிரபஞ்சம் உருவான நிகழ்வை ‘மகா வேட்டு’ அல்லது ‘மகா வெடிப்பு’ (Big Bang) என்று அழைக்கின்றனர். இப்படி வெடித்ததனால் அந்த முட்டையின் பாகங்கள் எல்லாம் விண்வெளியில் வெகு தூரத்துக்கு சிதறடிக்கப்பட்டன. அப்படி சிதறின பாகங்கள் எல்லாமே விநாடிக்கு பல்லாயிரம் கிலோமீட்டர்கள் என்கிற வேகத்தில் இன்னும் பயணிக்கின்றன. இந்த சிதறின, விரைவாக நகரும் பருப்பொருட்கள் தான் பின்னர் காலக்சிகளாகவும், விண்மீன்களாகவும், கிரகங்களாகவும் உருவாகின. இப்போது கூட பிரபஞ்சத்தின் எல்லா உடல்களும் வேகமாக விரிவடைந்து கொண்டே தான் செல்கின்றன. இதனை ‘விரிவடையும் பிரபஞ்சம்’ (Expanding Universe) என்று அழைக்கின்றனர். காலக்சிகள் என்பவை நம்மை விட்டு விலகிச் சென்று கொண்டே உள்ளன. வெகு தொலைவில் இருக்கும் டிம்மான காலக்சிகள் இன்னும் வேகமாக நம்மை விட்டு விலகிச் செல்கின்றன. அமெரிக்க வானியல் வல்லுனர் மில்டன் ஹ்யூமாசன் (Milton Humason) என்பவர் 1929ஆம் ஆண்டு நம்மை விட்டு விநாடிக்கு 3800 கிலோமீட்டர்கள் என்கிற வேகத்தில் விலகிச் செல்லும் ஒரு காலக்சியைக் கண்டு பிடித்தார்.

    அவரே 1936ஆம் ஆண்டு விநாடிக்கு 40,000 கிலோ மீட்டர்கள் என்கிற வேகத்தில் விலகிச் செல்லும் இன்னொரு காலக்சியையும் கண்டார். எல்லா காலக்சிகளும் இப்படி ஒன்றை விட்டு ஒன்று விலகிச் செல்வது எதனால் என்கிற காரணம் வானியலாளர்களுக்கு பெரிய பிரச்னையாக இருந்தது. மேலும் காலக்சிகளின் தொலைவு அதிகமாகும் போது, அவை நம்மை விட்டு விலகிச் செல்லும் வேகமும் அதிகமாகிறது.1929ஆம் ஆண்டு எட்வின் ஹப்புள் (Edwin Hubble) என்கிற அமெரிக்க வானியல் வல்லுனர் (நம் பால்வெளிகாலக்சி அல்லாமல் இன்னும் நிறைய இலட்சக்கணக்கான காலக்சிகள் பிரபஞ்சத்தில் உள்ளன என்று முதலில் சொன்னவர்) தான் இந்த விரிவடையும் பிரபஞ்சம் என்கிற கருத்தை முதலில் விளக்கினார். அவரது கருத்துப்படி முழு பிரபஞ்சமுமே சீராக விரிவடைகிறது. இதனால் காலக்சிகள் கூட ஒன்றை விட்டு ஒன்று விலகிச் செல்கின்றன.

    ‘மகா வெடிப்பு’ என்கிற நிகழ்வு தான் பிரபஞ்சத்தின் ஆரம்பம் என்று முன்பே கண்டோம். அப்படியானால் அந்த நிகழ்வு எப்போது நிகழ்ந்தது என்று கேள்வி எழலாம். காலக்சிகளுக்கிடையேயான சராசரி தொலைவு, அவை ஒன்றை விட்டு ஒன்று விலகிச் செல்லும் வேகம் இவை தெரிந்தால், அவை எல்லாமே எப்போது ஒரே முட்டைக்குள் அடர்த்தியான பொருளாக அடங்கி இருந்தன என்று பின்னோக்கி கணக்கிட முடியும். ஆனால் காலக்சிகளுக்கிடையேயான சராசரி தூத்தைக் கணக்கிடுவது, கடினமான காரியம். மேலும் அவை எவ்வளவு வேகத்தில் ஒன்றை விட்டு ஒன்று விலகிச் செல்கின்றன என்பதை அறிவதும் கடினம் தான். மேலும் இந்த விலகும் வேகம் கூட எல்லாச் சமயங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது. இதனால் மேற்கூறிய எல்லாவற்றுக்கும் சில அனுமானக் கணக்குகளை வைத்து ஹப்புள் என்பவர் கணக்கிட்டு பிரபஞ்சம் என்பது 2 பில்லியன் வருடங்களுக்கு முன் தோன்றியிருக்கக் கூடும் என்று சொன்னார். ஆனால் புவியியல் வல்லுனர்கள் மற்றும உயிரியல் ஆராய்ச்சியாளர்களின் கணக்குப் படி நம் தாய் கிரகமான பூமியே 2 பில்லியன் வருடங்களுக்கு முந்தைய வரலாற்றைக் கொண்டிருந்தது. எனவே பிரபஞ்சம் என்பது நிச்சயம் பூமியை விடவும் வயதானதாக இருக்க வேண்டும் என்று கருதப்பட்டது.
    தற்போது நிலவும் கருத்துப்படி பிரபஞ்சம் உருவாகக் காரணமான ‘மகா வேட்டு’ என்ற நிகழ்வு சுமார் 15 பில்லியன் வருடங்களுக்கு முன்னால் நிகழ்ந்திருக்க வேண்டும் எனப்படுகிறது. நம் சூரியக் குடும்பம் என்பது வெறும் 5 பில்லியன் வருடங்களாகத்தான் பிரபஞ்சத்தில் உள்ளது. சூரியக் குடும்பம் பிறப்பதற்கு முன்பு 10 பில்லியன் வருடங்கள் பிரபஞ்சம் என்பது இருந்து வந்துள்ளது. ‘மகா வேட்டு’ அல்லது ‘மகா வெடிப்பு’ என்ற வார்த்தையை முதலில் உருவாக்கியவர் அமெரிக்க வானியல் வல்லுனர் ஜார்ஜ் கேமோ (George Gamov) என்பவர்தான். அவர் தான் பிரபஞ்சம் உருவாகக் காரணமான நிகழ்வை இப்பெயரிட்டு அழைத்தார். உண்மையில் இந்த பெரு வெடிப்பை நம்மால் காண முடியுமா என்ற கேள்வி எழலாம். ஒரு விண்மீன் நம்முடைய பூமியில் இருந்து 10 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த விண்மீன் இரவு நேரத்தில் கண் சிமிட்டும் சிறு ஒளிக் கற்றையாக நம் கண்ணுக்குத் தெரிகிறது. உண்மையில் நாம் பார்க்கும் அந்த ஒளி 10 ஆண்டுகளுக்கு முன்பு அந்த விண்மீனில் இருந்து கிளம்பியிருக்க வேண்டும். அப்போது தான் அதன் ஒளியை நாம் இப்போது காண முடிகிறது. நாம் வெகு தொலைவு பின்னோக்கிச் செல்லும் போது கூட, இந்த மகா வெடிப்பை காண முடிவதில்லை. தற்போது ‘குவாசர்கள்’ என்கிற ஒரு பிரகாசமான பொருட்களை விண்ணில் வானவியல் வல்லுனர்கள் கண்டுள்ளனர். இவற்றிலிருந்து வரும் ஒளி 15 பில்லியன் வருடங்களுக்கு முன்பு கிளம்பி தற்போது தான் பூமியை வந்தடைந்திருக்கிறது. அதாவது அவை பிரபஞ்சம் தொடங்கின காலத்திற்கு சற்று பின்னால் இருந்திருக்கினறன. இப்படி குவாசர்களின் ஒளி நம்மை அடையும் போது, மகாவேட்டின் போது உண்டாகியிருக்கும் ஒளியை ஏன் நம்மால் உணர முடியவில்லை என்ற கேள்வி எழுந்தது.

    1949&ஆம் ஆண்டு ஜார்ஜ் கேமோ இதற்கான விடையை அளித்தார். மகா வெடிப்பின் எதிரொளியாக அதிலிருந்து கிளம்பின ஆற்றல் ‘மைக்ரோ அலைகளாக’ (Micro waves) இப்போது எல்லாத் திசைகளிலும் பரவியுள்ளது என்று அவர் சொன்னார். மேலும் இந்த மைக்ரோ அலைகளின் ஆற்றல் அளவையும் அவர் ஓரளவு அனுமானித்துச் சொல்ல முடிந்தது. இப்படி மகாவேட்டின் போது உண்டான ஆற்றல் மைக்ரோ அலைகள் ரூபத்தில் விண்வெளியின் எல்லாத் திசைகளிலும் சமமான அளவிலும் சமமான ஆற்றலுடன் விரவியுள்ளன. கேமோ அனுமானித்ததை அமெரிக்க வானியல் வல்லுனர்கள் ஆலன் பென்சையஸ் (Allan Penzias) மற்றும ராபர்ட் வில்சன் (Robert Wilson) ஆகியோர் 1964&ஆம் ஆண்டு நிரூபித்தனர்.
    பிரபஞ்சம் என்பது முதன் முதலாக ஒரு அதி அடர்த்தியான முட்டையாக இருந்தது என்றும், இப்போது பிரபஞ்சத்தில் நாம் காணும் எல்லா காலக்சிகளும் விண்மீன்களும் குவாசர்களும் ஆற்றல்களும் அந்த சிறிய முட்டைக்குள் தான் அடங்கியிருந்தன என்றும் நாம் கண்டோம்.
    இந்த முட்டை அதி வெப்பமாகவும் அதி அடர்த்தியாகவும் இருந்து வெடித்ததனால் தான் பிரபஞ்சம் என்று இன்றைக்கு நாம் காண்கின்ற எல்லாமே (மனிதன், புல், பூண்டு, சூரியன், நிலா, காலக்சி) உருவானது என்றும் நாம் பார்த்தோம். அப்படியானால், இந்த பிரபஞ்ச கரு முட்டை எப்படி உருவாகியிருக்க வேண்டும் என்ற கேள்வி எழலாம்.
    பிரபஞ்சத்தை உருவாக்கியது இந்த கரு முட்டை. இந்தக் கரு முட்டையை உருவாக்கியவன் தான் கடவுள் என்று சிலர் சொல்லக் கூடும். ஆனால் தற்கால விஞ்ஞானம் என்பது கடவுள் என்ற வார்த்தையை விட்டு வெகு தூரம் விலகிச் சென்று விட்டது. மனித விஞ்ஞானம் எந்தக் கருத்தையும் இப்படி கடவுளிடம் விட்டு விட்டு சும்மா இருப்பதில்லை. அறிவின் மூலமாகவும் ‘Reasoning’ எனப்படும் அறிவாராய்ச்சியின் மூலமாகவும் மனிதன் இயற்கையின் ஆச்சர்யங்களுக்கு விடை தேடுகிறான். பிரபஞ்ச கரு முட்டையை கடவுள் உருவாக்கினார் என்று சொல்லி சும்மா இருக்க விஞ்ஞானம் விரும்பவில்லை.
    1980ஆம் ஆண்டு அமெரிக்க இயற்பியல் வல்லுனர் ஆலன் கூத் (Alan Guth) என்பவர் இந்தக் கேள்விக்கான விடையை ‘குவாண்டம் இயற்பியல்’ (Quantum Mechanics) என்கிற ஒரு துறையின் மூலமாக காண முற்பட்டார். அவரது கருத்துப்படி மகா வெடிப்புக்கு முன்னிருந்த பிரபஞ்சம் வெறுமனே ஒரு வெற்று வெளிதான். அதாவது அதிக ஆற்றலைத் தன்னகத்தே கொண்டிருந்த ஒரு வெற்றிடமாகத் தான் இந்தப் பிரபஞ்சம் இருந்திருக்கிறது. இதை இவர் ‘போலி வெற்றிடம்’ (False Vacuum) என்று அழைத்தார். அதாவது வெற்றிடம் போல இருந்தாலும் அதில் அபரிமிதமான ஆற்றல் உள்ளார்ந்து நிறைந்திருந்தது. அதனால் ஆரம்ப பிரபஞ்சத்தை வெறுமனே வெற்றிடம் என்று சொல்ல முடியவில்லை.
    ஒரு சில குருட்டாம் போக்கான நிகழ்வு மாற்றங்களால் இந்த ஆரம்ப ஆற்றல் வலிமையாக இருந்த இடங்களில் எல்லாம் சில தோற்றக் கூறுகள் உருவாகியிருக்க வேண்டும். அதாவது கடலில் எப்படி அலைகள் நுரையை உருவாக்குகின்றனவோ, அதே போல எல்லையற்ற, ஆற்றல் வாய்ந்த போலி வெற்றிடத்தில் ஆங்காங்கே எல்லையற்ற, ஆற்றல் வாய்ந்த போலி வெற்றிடத்தில் ஆங்காங்கே சில தோற்றங்கள் உருவாகின. இவற்றில் சில தோற்றங்கள் உண்டாகின அதே வேகத்திலேயே மறைந்து, மீண்டும் போலி வெற்றிட ஆற்றலாக மாறி விட்டன. இவ்வாறு ஆதி ஆற்றலில் இருந்து உருவான ஒரே ஒரு தோற்ற நுரை மட்டும் எப்படியோ சில காரணங்களால் நாம் வாழும் பிரபஞ்சமாக விரிவடைந்து இருக்க வேண்டும்.
    மேலே ஆலன் கூத் சொன்னவை எல்லாமே ஏதோ விஞ்ஞானக் கதைகளில் வரும் நிகழ்வுகள் போலத்தான் இருக்கிறது. விஞ்ஞானம் என்பது இன்னும் Ultimate எனப்படுகின்ற இறுதியான விதிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. விஞ்ஞானம் என்பது நிறைய அனுமானங்களை முன்னே வைக்கிறது. பின் அவற்றை நிரூபிக்க முயற்சிக்கிறது. எதுவும் இதில் உறுதி இல்லை. ஆலன் கூத்தின் கருத்துக்கள் கூட இன்னும் விஞ்ஞானிகளிடையே ஒரு புதிராகவே உள்ளது. கூத்தின் தியரி சரி என்று வைத்துக் கொண்டாலும் கூட, பிரபஞ்சம் உருவாவதற்கு முன்பு இருந்து இந்த ‘போலி வெற்றிடம்’ எங்கே இருந்து உருவாகியிருக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. இப்படி பின்னோக்கி சென்று பிரபஞ்சத்தின் தொடக்கம் பற்றிய அறிய முற்படுவதில் நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளது. அந்த ‘போலி வெற்றிடம்’ என்பது கடவுளின் படைப்பு என்று வைத்துக் கொண்டால், ‘கடவுள் என்பவரை யார் படைத்தது என்று சிலர் கேள்வி எழுப்பினர். கடவுள் நிரந்தரமாக எப்போதும் இருப்பவர் என்ற பதில் விஞ்ஞானிகளிடையே அவ்வளவாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

  3. சௌந்தரபார்வதி says:

    ‘எங்கு தொடங்கி எங்கு முடிக்க’ என்று சிற்றின்பத்தை பற்றி ஒரு பாடல் உண்டு. அதுபோல் இந்த கட்டுரையை எங்க ஆரம்பித்து எப்படி முடிப்பது என்றே எனக்கு தெரியவில்லை.
    சென்ற பதிவில் ஆன்மிகம் என்ற அகத்தாய்வு எனபது நேற்றைய அறிவியல், இன்றைய அறிவியலுக்கும் நேற்றைய அறிவியலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை, அறிவியல் புறத்தை பார்க்கின்றது , ஆன்மிகம் என்கிற அகத்தாய்வு அகத்தை பார்க்கின்றது என்று பார்த்தோம். சென்ற பதிவிற்கான வழிகாட்டி.

    அன்றைய அறிவியலான அகத்தாய்வில் கண்டறியப்பட்ட பிரபஞ்ச ரகசியங்களில் சில வேதங்களிலும், புராணங்களிலும் ,யோக நூல்களிலும் மற்றும் வேறு சில நூல்களிலும் ஆங்காங்கே உள்ளதை காண முடிகின்றது.

    இன்றைய அறிவியல் வளர வளர சிலர் இப்படிப்பட்ட பண்டைய நூல்களுடன் அறிவியலை சம்பந்த்தப்படுத்தி அறிவியல் வேறு விதமாக உள்ளது இந்த நூல்களில் சொல்வது வேறு விதமாக உள்ளது என்று கேள்வி எழுப்புகின்றனர்.

    உண்மையில் இந்த அறிவியலாளர்கள் அபிரகாமிய மதங்களுடன் (அதாவது இஸ்லாம் மற்றும் கிறிஸ்த்துவம் ) மட்டுமே அறிவியல் ஆய்வுகளை ஒப்பிட்டு பார்த்து இந்த முடிவுக்கு வருகின்றனர். (ஆபிரகாமிய மதங்கள் தவறு என்ற கூறவில்லை அவைகளும் இந்தியாவிலிருந்தே சென்றிருக்கும் என்பதற்கான சாத்திய கூறுகள் நிறைய உள்ளன. என்ன அங்கே அகத்தாய்வு உண்மைகள் மிக சொற்ப அளவே உள்ளதாக நினைக்கின்றேன்.இந்திய புராணங்களிலும் அறிவியலுக்கு முரணான செய்திகள் சில உள்ளது என்பதை மறுக்க இயலாது.)

    ஆனால் அவர்களுக்கு இந்திய நூல்களில் உள்ள பிரபஞ்ச ரகசியத்தை பற்றி தெரியவில்லை. வெகு சில அறிவியலாளர்களே பண்டைய இந்திய நூல்களை பற்றி “கொஞ்சம்” ஆய்வு செய்து அறிவியல் உண்மைகளோடு ஒப்பிட்டு பார்த்துள்ளனர். ஒப்பிட்டு பார்த்த அவர்கள் திகைத்து போய்விட்டனர். ஏன் எனில் இன்றைய அறிவியல் சிந்தித்து கூட பார்க்க முடியாத அளவில் இந்திய நூல்களில் கால அளவுகள் உள்ளது.

    பிரபஞ்சம் உருவாகி 13.7 பில்லியன் ஆண்டுகள் ஆகின்றன என்பது இன்றைய அறிவியலாளர்களால் ஒத்துக்கொள்ளப்பட்ட ஒன்று . இந்திய புராணத்தில் இந்த 13.7 பில்லியன் ஆண்டுகள் என்பது கிட்டத்தட்ட பிரம்மனின் வெறும் ஒன்றரை நாட்கள் தான்.

    பிரம்மனின் ஒரு பகல் பொழுது 4.32 பில்லியன் ஆண்டுகளுக்கு சமம் (இதை ஒரு கல்பம் என்று சொல்வார்கள் ). இரவு பொழுது மற்றும் ஒரு 4.32 பில்லியன் ஆண்டுகள். ஆக பிரம்மனின் ஒரு நாள் என்பது 8.64 பில்லியன் ஆண்டுகளுக்கு சமம். (இங்கே பிரம்மன் உண்மையா பொய்யா என்ற சர்ச்சை தேவை இல்லை).

    இதேபோல் இந்தியர்கள் 311,040 பில்லியன் ஆண்டுகள் அதாவது 311 ட்ரில்லியன் ஆண்டுள் பற்றி பேசியுள்ளதாக அறிவியல் அறிஞர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். அது மட்டுமல்ல 1/1,000,0000 நொடிகள் பற்றியும் பேசியுள்ளதாக கூறுகின்றனர்.

    இவை அனைத்தையும் அவர்கள் அந்த காலத்தில் அகத்தாய்வு செய்தே கணக்கிட்டுள்ளதாக தெரிகிறது.

    புறத்தாய்வு செய்திருக்க வாய்ப்புகள் உள்ளது என்று சொல்லும் அளவுக்கு எந்த ஒரு குறிப்புகளும் இதுவரை கிடைக்க வில்லை.

  4. சௌந்தரபார்வதி says:

    உலகின் மிகப்பெரிய “பிக்பேங்’ (பெரிய வெடிப்பு) இயற்பியல் பரிசோதனை பிரான்ஸ் சுவிட்சர்லாந்து எல்லையில் வெற்றிகரமாக நடந்துள்ளது.பிரபஞ்சம் தோன்றிய போது, ஒரு மாபெரும் வெடிப்பு நடந்ததாகவும் அந்த வெடிப்பின் போது சிதறிய துகள்களால் தான் இந்த உலகமும் உயிர்களும் உருவாகின என்பது அறிவியல் கருத்து. இதை பரிசோதித்துப் பார்க்க நீண்ட காலமாக முயற்சி நடந்த போதும், விஞ்ஞானிகள், நேற்று சோதனையை வெற்றிகரமாக நடத்தினர். “கடவுளுக்கு’ இணையான ஒரு சக்தி இந்த பிரபஞ்சத்தைப் படைத்தது என்றால் அது எது என்பதையும் விளக்கம் பெற விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர். “ஹிக்ஸ் பாசன்’ எனும் துகளை விஞ்ஞானிகள் “கடவுள் துகள்’ என்று அழைக்கின்றனர்.

    முதன்முதலில் பிரபஞ்சம் தோன்றிய போது, நடந்த பெரிய வெடிப்பின் போது (பிக்பேங்) இந்த துகள் 25 வினாடிகள் மட்டுமே வெளிப்பட்டதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பின் இது பிரபஞ்சத்தின் மற்ற பொருட்களுடன் இரண்டறக் கலந்து விட்டது. தற்போது மீண்டும் செயற்கையாக “பிக்பேங்’ நடத்துவதன் மூலம் அந்த “கடவுள் துகளை’ கண்டறிய முடியும் என்று விஞ்ஞானிகள் காத்திருக்கின்றனர். நேற்று துவங்கிய இந்த பரிசோதனை முடிவை உடனே தெரிந்து கொள்ள முடியாது. இதற்கு இன்னும் இரண்டு, மூன்று மாதங்கள் கூட ஆகலாம். அப்போது பிரபஞ்சம் தோன்றியது குறித்து இதுவரை பதில் கிடைக்காத சந்தேகங்களுக்கும் விடை கிடைக்கும் .

    கடந்த 30 ஆண்டுகளாக இதுகுறித்து ஆய்வுசெய்த விஞ்ஞானிகள், கடந்த 2003ம் ஆண்டு கட்டுமானப் பணியைத் ஆரம்பித்தனர். உலகம் முழுவதிலும் இருந்து ஒன்பதாயிரம் இயற்பியல் விஞ்ஞானிகள் இதில் கலந்து கொண்டனர். இந்த சோதனைக்காக சுவிட்சர் லாந்து பிரான்ஸ் எல்லை அருகே “லார்ஜ் ஹாட்ரான் கொலைடர்’ (மிகப்பெரிய ஹாட்ரான் துகள் மோதல் கருவி) எனும் பெரிய கருவியை ஐரோப்பிய அணு ஆய்வுக் கழகத்தை(செர்ன்) சேர்ந்த விஞ்ஞானிகள் லின் இவான்ஸ் என்பவர் தலைமையில் நிர்மாணித்தனர்.

    இதற்கான செலவு 900 கோடி டாலர். வட்ட வடிவமான 27 கி.மீ., நீளம் கொண்ட சுரங்கம் போன்ற பாதையுடன் கூடியது. இந்த சுரங்க வளையத்துக்குள் அணுவின் ஒரு பகுதியான புரோட்டான் கற்றைகளை பெரிய வெடிப்புக்காகச் செலுத்தினர். இந்திய நேரப்படி, மதியம் 1 மணி 5 நிமிடத்துக்கு பரிசோதனை துவங்கியது. 1 மணி 56 நிமிடங்களுக்கு சோதனை வெற்றிகரமாக நிகழ்ந்ததற்கான புள்ளிகள் “செர்ன்’ மைய கம்ப்யூட்டர் திரையில் தோன்றியது. இதனால் உற்சாகம் அடைந்த விஞ்ஞானிகள், “ஷாம்ப் பெய்ன்’ பாட்டில்களைத் திறந்து வெற்றியைக் கொண்டாடினர்.

    தற்போது, இடமிருந்து வலமாக துகள்கள் சுரங்க வளையத்துக்குள் வினாடிக்கு 11 ஆயிரம் தடவை சென்று வரும்படி புரோட்டான் துகள் கற்றைகளை அனுப்பியுள்ளனர். அடுத்த கட்டமாக வலமிருந்து இடமாக துகள்களை அனுப்பும் போது தான், அந்த “பெரிய வெடிப்பு’ நிகழும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர். அப்போது கோடிக்கணக்கில் வோல்ட் மின்சார சக்தி வெப்பம் உருவாகி, அதில் கிடைக்கும் துகள் தான் இத்தனை நாள் காத்திருக்கும் கேள்விக்குத் தகவல் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, பிரபஞ்சம் உருவான பெரிய வெடிப்புக் கோளம் ஒரு குறுகிய நேரத்துக்கு உருவாகும் என்றும் விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.

    பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள், பால்வீதி, கிரகங்கள் என நாம் அறிந்தவை வெறும் 4 சதவீதம் மட்டுமே. மீதம் உள்ளவற்றில் 73 சதவீதம் “அறியப்படாத சக்தியாகவும்’ (டார்க் எனர்ஜி), 23 சதவீதம் அறியப் படாத பருப்பொருளாகவும் (டார்க் மேட்டர்) உள்ளது. இந்த ஆய்வின் முடிவில் இது போன்ற மர்மங்கள் விலகும் என்கின்றனர் விஞ்ஞானிகள். “பிக்பேங்’ நிகழ்ந்தவுடன் அடுத்த கணத்தில் என்ன நடந்தது? புரோட்டான்கள் அழிந்து “உயிர்க் குழம்பு’ எவ்வாறு உருவானது? இதுபோன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடைகாண உள்ளனர்.

    இந்த ஆய்வு காரணமாக உலகமே கூட அழிந்து போகலாம் என சில விஞ்ஞானிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இவ்வாறு செயற்கை மோதல்களை நிகழ்த்துவதால், ‘பிளாக் ஹோல்’ எனும் கருந்துகள் உருவாகி பூமி உட்பட கிரகங்கள், சூரியன் அனைத்தையும் உள்ளிழுத்துக்கொள்ளும் என்றனர். அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் இந்த ஆய்வுக்கு எதிராக வழக்குகளும் தொடரப்பட்டன. ஆனால், கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வைக் கண்டறிய நடந்த முயற்சியில் வெற்றி பெற்ற இயற்பியல் விஞ்ஞானிகள் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

    பயம் வேண்டாம்: “பிக் பேங்’ பற்றிய பயம் தேவையற்றது என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்துள்ளார். இந்த செர்ன் தளத்துக்கு தானே சென்றுள்ளதாகக் கூறிய கலாம், “இந்த ஆய்வால் எந்த ஆபத்தும் ஏற்படப் போவதில்லை, மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த இது போன்ற பரிசோதனைகள் அவசியம்’ என்றார்.

    ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் உட்பட உலகின் முன்னணி இயற்பியல் விஞ்ஞானிகளும் இந்த ஆராய்ச்சியை ஆதரித்துள்ளனர். இந்த புரோட்டான் துகள் கதிர்கள் அதிக திறனுடன் இருக்கும் போது, அதன் மீதான கட்டுப்பாட்டை விஞ்ஞானிகள் இழப்பதால் மட்டுமே அதிகபட்ச பாதிப்பு ஏற்பட முடியும். ஆனால், அப்போதும் அந்த கருவிக்கும், சுரங்கப் பாதைக்கும், சுற்றியுள்ள பாறைகளுக்கும் மட்டுமே பாதிப்பு ஏற்படும். உலகத்துக்கு இதனால் எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்தனர். முதற்கட்ட ஆய்வுகள் நேற்று நடந்தன. இந்த ஆய்வு 2009ம் ஆண்டுவாக்கில் தான் உச்சகட்டத்தை அடையும். அப்போது தான் தேவையான தகவல்களை முழுமையாகப் பெற முடியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்தியாவுக்கும் பெருமை: உலகை அதிரச்செய்த இச்சோதனை நடந்த “லார்ஜ் ஹாட்ரான் கொலைடர்’ (எல்.எச்.சி.,) கருவியை உருவாக்குவதில் இந்தியா சார்பிலும் தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்பட்டன. இதன் கட்டமைப்பில் இந்தூரில் உள்ள “ராஜா ராமண்ணா சென்டர் பார் அட்வான்ஸ்டு டெக்னாலஜி’ பங்களித்துள்ளது. “மும்பை டாடா இன்ஸ்டிடியூட் ஆப் பன்டமென்டல் ரிசர்ச்,’ “டிராம்பே பாபா அணுசக்தி ஆய்வுமையம்,’ பனாரஸ் இந்து பல்கலை’ போன்றவையும் இந்த ஆய்வுப்பணிகளுக்குக் குறிப்பிடத்தக்க அளவு உதவியுள்ளன. இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளில் 200க்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இந்தியா சார்பிலும் 100 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் பீதி: “பிக்பேங்’ சோதனையால் பேரழிவு ஏற்படலாம் என இந்தியாவின் சில பகுதிகளில் அச்சம் நிலவியது. மேற்குவங்கத்தில் சிலிகுரி நகரில் சூரியனை சுற்றி செயற்கை வட்டம் தெரிந்ததால் மக்கள் மத்தியில் பீதி நிலவியது. இதனால், பலரும் வீட்டுக்குள் பதுங்கிவிட்டதால், சாலைகள் வெறிச்சோடின. சூரிய ஒளி பனிப்படலத்தின் இடையே ஊடுருவுவதால் தான் இத்தகைய வட்டம் உருவானதாக கோல்கட்டாவில் உள்ள பிர்லா கோளரங்கத்தின் இயக்குனர் துவாரி தெரிவித்தார். “இது வழக்கமான நிகழ்வே, இது குறித்து அச்சமடைய அவசியமில்லை’ என்றார். ஒரிசாவில் உள்ள புவனேஸ்வரில் உள்ள மக்கள் “பிக்பேங்’ நிகழ்வை ஒட்டி கோவில்களுக்குச் சென்று வழிபட்டனர். “இந்த சோதனையால் பூமிக்கு ஆபத்து ஏற்படுமா என தொடர்ந்து விசாரித்ததாக’ கோளரங்க இயக்குனர் சுபந்து பட்நாயக் தெரிவித்துள்ளார்.

  5. சௌந்தரபார்வதி says:

    பிரபஞ்சம் ஒன்றில்லை !
    பல்வேறு !
    காலமற்ற பிரபஞ்சமே
    கருவாகி
    உருவாகி உள்ளது !
    காலத்துக்குத் துவக்கம் இல்லை !
    முறிந்த கருந்துளையால்
    பிறக்கும்
    சேய்ப் பிரபஞ்சம் !
    மாண்ட பிரபஞ்சம் அடுத்து
    மீண்டெழும் !
    ஆதி அந்த மற்ற
    காலத் தூரிகை போடும்
    கோலம்
    மூலமும் முடிவு மில்லாப்
    பிரபஞ்சம் !
    பிரபஞ்சம் முறிந்து புதிதாய்ப்
    பிறக்கும் !
    உதித்த பிரபஞ்சம்
    உப்பி விரிந்து வெப்ப இழப்பில்
    சப்பிப் போகும் !
    பிரபஞ்சம்
    புத்துயிர் பெறக் கருந்துளைக்கு
    வித்துள்ளது !
    உயிரினங்கள் தோன்றி
    மடிவது போல்
    முடிவடையும் பிரபஞ்சம் !
    புரிந்தும் புரியாய வேதமாய்ப்
    புதிருக்குள் புதிராகும்
    அதிசயப் பிரபஞ்சம் !

    “வெறுமையிலிருந்து எதுவுமே உருவாக முடியாது.”

    லுகிரிடியஸ் ரோமானிய வேதாந்தி (Lucretius) கி.மு. (99-55)

    “நமது பிரபஞ்சம் பத்து பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மெய்யாகவே வெறுமையிலிருந்து தோன்றியதாக நான் அனுமானம் செய்கிறேன் ! . . . . ஏன் அவ்விதம் நிகழ்ந்தது என்னும் கேள்விக்கு எனது தாழ்மையான முன்னறிவிப்பு இதுதான் : எப்போதாவது ஒரு யுகத்தில் அப்படி நேரும் தோற்றங்களில், நமது பிரபஞ்சமும் ஒன்று என்பது !”

    எட்வேர்டு டிரையன், பௌதிகப் பேராசிரியர் நியூயார்க் பல்கலைக் கழகம் (1975)

    “நமது பிரபஞ்சம் பெரும் பாய்ச்சலில் (Big Bounce) உதித்ததே தவிரப் பெரு வெடிப்பில் (Big Bang) தோன்றவில்லை ! அதாவது முதலில் குவாண்டம் ஈர்ப்பாற்றல் நிகழ்த்திய விந்தை விளைவுகளால் உள் வெடிப்பு தூண்டிப் புற வெடிப்பில் (An Implosion Triggering an Explosion) உண்டானது.”

    மார்டின் போஜோவால்டு, (Martin Bojowald, Asst Professor of Physics, Penn. State, USA) (Authour of Big Bounce Theory) (July 2007

    “பெரு வெடிப்பு நியதியில் உள்ள இடைவெளித் துளைகளை அகிலத்தின் உப்புதல் கொள்கை (Cosmic Inflation Concept) அடைத்து நமது பிரபஞ்சத்தைப் பலவற்றுள் ஒன்றாக மாற்றி விட்டது. மேலும் விஞ்ஞானிகளுக்கு உப்புதல் கொள்கை பல்வேறு பிரபஞ்சங்களைப் (Multiverse) பற்றி உரையாட மன உறுதி தந்துள்ளது. அதாவது பிரபஞ்சத்தில் பிரபஞ்சங்கள் (A Universe of the Universes) இருப்பது”

    ஆடம் ஃபிராங்க் (Astronomy Magazine Editor, Physicist)

    விரியும் பிரபஞ்சத்தைப் பற்றி அறிய ஒரு பிறவிக் காலம் முழுதும் அர்ப்பணித்தாலும் போதாது ! மறைந்து கிடக்கும் அகிலத்தின் மர்மங்கள் சிறிது சிறிதாகவே மலர்கின்றன ! அநேக புதிய புதிர்களை வரப் போகும் எதிர்கால யுகங்களுக்காக, இயற்கை தனியாக வைத்துள்ளது ! எல்லா மர்மங்களையும் ஒரே காலத்தில் விடுவிக்க இயற்கை ஒருபோதும் நம்மை விடுவதில்லை !

    ஸெனேகா (முதல் நூற்றாண்டு ஞானி)

    புரிந்தும் புரியாத புதிருக்குள் புதிரான பிரபஞ்சம் !

    பிரபஞ்சம் எப்படித் தோன்றியது, எப்போது தோன்றியது, எதனால் தோன்றியது என்னும் வினாக்கள் பல்லாண்டுகளாய் விஞ்ஞானிகளுக்குச் சவாலாய் இருந்து வருகின்றன ! யானையைப் பார்த்த குருடராய் விஞ்ஞானிகள் தடுமாறி ஒவ்வோர் அங்கத்தை வெவ்வேறு விதமாய் விளக்கி குழப்பத்தையும் மயக்கத்தையும் உண்டாக்கி வருகிறார். இதுவரைப் பெரும்பான்மையினர் ஒப்புக் கொண்ட பிரபஞ்சப் “பெரு வெடிப்பு நியதியும்” (Bib Bang Theory) அத்திவாரத்தில் ஆட ஆரம்பித்துள்ளது ! பெருவெடிப்பு நியதியை வேத நெறியாக ஏற்றுக் கொள்ளாது பல்வேறு புதிய கோட்பாடுகள் முளைவிட்டுக் கிளைவிட்டுள்ளன. பூமியில் விழுந்த பூர்வீக விண்கற்களின் கதிரியக்க எச்சங்களின் அரை ஆயுளை (Radioactive Half Life of Decay Elements) ஆராய்ந்து விஞ்ஞானிகள் இப்போதுள்ள பிரபஞ்சம் 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியது என்று கணித்துள்ளார். அந்தக் கணித எண்ணிக்கையில் ஐயப்பாடு எதுவும் இல்லை. பிரபஞ்சம் பெரு வெடிப்பில் தோன்றியது என்று கூறினால் பெரு வெடிப்புக்கு முன்னால் விண்ணில் என்ன இருந்தது என்னும் வினா எழுகிறது ! வரையறை யில்லா அசுரத் திணிவுள்ள கடுகுப் பிண்டம் (Minute Matter of Infinite Density) ஒன்று வெடித்துப் பிரபஞ்சம் உண்டானது என்று அனுமானிக்கும் போது அந்தப் புதிரான பிண்டம் எந்த பௌதிக விதியையும் பின்பற்றுவதில்லை. வரையறை யில்லா அத்தகைய திணிவுப் பிண்டத்தைச் சில விஞ்ஞானிகளால் கற்பனை செய்ய முடியவில்லை ! ஐயப்பாடு எழுப்பும் பெரு வெடிப்பு நியதிக்குப் பதிலாக இப்போது வேறு சில புதுக் கோட்பாடுகள் வெளிவந்துள்ளன !

  6. சௌந்தரபார்வதி says:

    நூறாண்டுகளுக்கு முன் அறியப்பட்ட பிரபஞ்சம் மிக்க எளியது. நீடிப்பது நிலையானது. ஒற்றைக் காலாக்ஸி (நமது பால்வீதி) கொண்டு கண்ணுக்குத் தெரியும் ஒரு சில மில்லியன் விண்மீன்களை உடைய ஒரு பிரபஞ்சம் ! 21 ஆம் நூற்றாண்டில் விண்ணோக்கிகள் மூலம் காணப்படும் பிரபஞ்சம் பிரமிக்க வைப்பது ! கோடான கோடி காலாக்ஸி ஒளிமந்தைகள், பல கோடி பில்லியன் விண்மீன்கள் உலாவிடும் பிரபஞ்சம் ! நூற்றுக்கு மேற்பட்ட மூலக அணுக்களும், புரோட்டன், நியூட்ரான், எலெக்டிரான் போன்ற பரமாணுக்களும், அவற்றைப் பிணைத்த குவார்க்குகள், லெப்டான்கள் (Quarks & Leptons) போன்ற நுன்ணிய அடிப்படைத் துகள்களும் உடையது. விண்ணோக்கிக் கருவிகளுக்குப் புலப்படும் பிரபஞ்சப் பகுதியில் சுமார் 100 பில்லியன் காலாக்ஸிகளும், அவை ஒவ்வொன்றிலும் சுமார் 100 பில்லியன் விண்மீன்களும் எண்ணற்ற அண்டக் கோள்களும் இருப்பதாகக் கணிக்கப் படுகிறது.

    காலாஸிகளை விண்மீன்களின் தோரணங்களோடு ஓர் ஒழுங்கு அமைப்பில் அடைத்து வைத்திருப்பது அவற்றின் மையத்தில் உள்ள புதிரான அசுரக் கருந்துளையின் (Black Hole) ஈர்ப்பியல் விசையே ! காலாக்ஸி ஒளிமந்தைகளை விரைவாக விரட்டிப் பிரபஞ்சத்தை விரியச் செய்வது மாயமான கருஞ்சக்தி (Dark Energy) ! கருஞ்சக்தி கவரும் ஈர்ப்பு விசைக்கு எதிரான ஒரு விலக்கு விசை ! இந்த விலக்கு விசைதான் ஒளிமந்தைகள் ஒன்றுடன் ஒன்று மோதி முறிந்து போகாதவாறு அவற்றைத் தனியாகக் கடத்திச் செல்கிறது !

    பிரபஞ்சம் ஒன்றில்லை பல்வேறு !

    2006 ஆம் ஆண்டில் வாடர்லூ பல்கலைக் கழகத்தின் அமெரிக்க விஞ்ஞானி லீ ஸ்மோலின் (Lee Smolin) “கருவிருத்திப் பிரபஞ்ச நியதி” (Fecund Universes Theory) என்னும் தன் நூல் ஒன்றில் கூறுவது இதுதான் : அந்த நியதி பிரபஞ்சப் பிறப்புகளின் இயற்கைத் தேர்வுக்குப் பயன்படுகிறது. கருந்துளைகள் முறிந்து புதிய பிரபஞ்சங்கள் உருவாகும் என்று குறிப்பிடுகிறார். சேய்ப் பிரபஞ்சம் தாய்ப் பிரபஞ்சத்தின் அடிப்படை நிலைப்புப் பண்பாடுகளைச் சில மாறுபாட்டுடன் பெற்றிருக்கும் ! சேய்ப் பிரபஞ்சம் மூலப் பிரபஞ்சத்தின் பண்பாடுடன் அதன் வாரிசாக இருக்கும். வாரிசாக இல்லாத தோல்விக் குணப்பாடுள்ள பிரபஞ்சங்கள் சிசு உருவாக்குவதற்கு முன்பே “வெப்ப மரணத்தை” (Heat Death due to High Entropy) எய்து விடும். ! லீ ஸ்மோலின் உயிரியல் விஞ்ஞானத்தைப் (Biology) பின்பற்றித் தனது கருவிருத்திப் பிரபஞ்ச நியதியை விளக்குகிறார். அந்த நியதி ‘அகிலவியல் இயற்கைத் தேர்வு’ (Cosmological Natural Selection) என்றும் குறிப்பிடப் படுகிறது.

    லீ ஸ்மோலின் ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் எத்தனை கருந்துளைகள் உள்ளனவோ அத்தனையும் முறிந்து அவை சேய்ப் பிரபஞ்சங்களாய்ப் பிறக்கும் என்று கூறுகிறார். ஆதலால் கருவிருத்திப் பிரபஞ்ச நியதி சார்லஸ் டார்வின் விளக்கிய பரிணாம வளர்ச்சி விதியை ஒட்டி இருப்பதாகத் தெரி,கிறது. லீ ஸ்மோலின் நியதியைத் திறனாய்வு செய்த ஜோ ஸில்க் (Joe Silk) என்பவர் சுட்டிக் காட்டுவது : “நமது பிரபஞ்சத்தில் கருந்துளைகள் உற்பத்தி செய்யும் தகுதி நான்கு அடுக்கு (Four Orders of Magnitude) குன்றியுள்ளது.” சிற்றாயுள் பிரபஞ்சங்கள் (Short-lived Universes) பெருத்துப் போய் நீளாயுள் பிரபஞ்சங்களை (Long-lived Universes) ஆளுமை செய்யக் கூடுமாதலால், பரிணாம இயக்கத்தை (Evolutionary Dynamics) உண்டு பண்ண ‘பற்பல பிரபஞ்ச காலத்’ (Multiversal Time) தொடர்வைத் திணிக்கக் கூடாது என்று வேறொரு விஞ்ஞானி அதையும் எதிர்க்கிறார்.

    2009 ஆம் ஆண்டில் வெளியிட்ட கட்டுரையில் லீ ஸ்மோலின் தனது முந்தைய கருத்தை நிராகரித்து வேறொரு புதிய கொள்கையை அறிவித்தார். “ஒரே ஒரு பிரபஞ்சம்தான் உள்ளது. அதனை வடிவளவில் ஒத்துள்ள வேறெந்தப் பிரபஞ்சங்களும் கிடையா ! ஒன்றுக்கு ஒன்று இணையாகப் பல்வேறு பிரபஞ்சங்களும் (Multiverse) இருப்பவையல்ல ! மேலும் ஒன்றைப் போல் ஒன்றுள்ள பிரபஞ்சமும் ஒன்றுக்குள் ஒன்று அடங்கியுள்ள பிரபஞ்சமும் இல்லவே இல்லை.

    பெரு வெடிப்பு நிகழ்ச்சிக்கு முன்னால் நேர்ந்தது என்ன ?

    பென்சில்வேனியா மாநிலப் பல்கலைக் கழகத்தின் பௌதிகத் துணைப் பேராசியர் மார்டின் போஜோவால்டு ஒரு புதிய கணித மாடலைப் படைத்து “முடிச்சுத் துகளியல் ஈர்ப்புக் கோட்பாடு” (Loop Quantum Gravity Theory) ஒன்றில் ஆழ்ந்து சிந்தனை செய்தார். அது ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதியையும் துகளியல் யந்திரவியலையும் (Relativity Theory & Quantum Mechanics) இணைத்தது. அந்தக் கணிதச் சமன்பாட்டில் பிரபஞ்சத்தின் ஆரம்ப காலம் (Time T=0) என்று நிரப்பினால் பிரபஞ்சத்தின் தோற்றக் கொள்ளளவு பூஜியமில்லை என்பது தெரிய வந்தது. மேலும் அடர்த்தி முடிவில்லாமை அல்ல (Density of the Universe is NOT Infinite) என்றும் தெளிவானது. அதாவது அவரது புதிய கணித மாடல் பிரபஞ்சத்தின் தோற்ற கால நிலையை ஆராய உதவியது.

    முன்பே இருந்த முடிச்சுத் துகளியல் கோட்பாட்டைப் புதிய கணித மொழியில் போஜோவால்டு எளிதாக்கினார். ஆனால் அவர் பயன்படுத்திய கணிதச் சமன்பாட்டு விதத்தில் ஒரு மகத்தான நிகழ்ச்சி பிரமிப்பை உண்டாக்கியது. அதாவது தற்போதுள்ள நமது பிரபஞ்சத்துக்கும் முன்பாக வேறொரு பிரபஞ்சம் இருந்திருக்கிறது என்பதைக் காட்டியுள்ளது. இது சற்று சிக்கலான சிந்தனைதான். ஏனெனில் பிரபஞ்சப் பெரு வெடிப்பில் கால வெளி அந்தக் கணத்தில் தோன்றின என்பது அறியப் படுகிறது. போஜோவால்டு கணிப்பு மெய்யானால் அது இதற்கு முந்தி இருந்த ஒரு பிரபஞ்சத்தை எடுத்துக் காட்டுகிறது. அது எங்கோ ஒரு மூலையில் ஒளிந்து கொண்டுள்ளது. ஆனால் அது சிறுத்துக் குறுகிப் போய் பேரசுரத் திணிவில், பேரளவு உஷ்ணத்தில் மிகக் மிகக் குள்ளி காலவெளிக் கடுகாய்க் (Ultra-dense, Ultra-Hot & Ultra-Small Ball of Space Time) கிடக்கிறது ! ஏதோ ஓர் கட்டத்தில் எப்படியோ அந்த உஷ்ணத் திணிவுக் கடுகைத் “துகளியல் ஈர்ப்பாற்றல்” (Quantum Gravity) இழுத்துச் சுருக்கி வைத்துக் கொண்டது.

  7. சௌந்தரபார்வதி says:

    இதை வேறு விதக் கண்ணோட்டத்தில் பிரபஞ்ச விளைவுகளைப் படிப்படியாகப் பின்னோக்கிப் பார்த்துக் கால மணி பூஜியத்துக்கு (Time T=0) நெருங்கினால் போஜோவால்டு கணித்த முந்தைய பிரபஞ்சத்தின் காணாத தோற்றம் தெரிகிறது. போஜோவால்டு அந்த பூஜிய காலமணி நிகழ்ச்சியை “பெரும் பாய்ச்சல்” (Big Bounce) என்று குறிப்பிடுகிறார். அதாவது முந்தைய பிரபஞ்சம் அந்தப் பூஜிய கால மணியில் சீர்குலைந்து மறுபடியும் ஒரு புது முகப் பிரபஞ்சமாக, நமது பிரபஞ்சமாகக் குதித்தது என்று போஜோவால்டு கூறுகிறார். அவரது கணிசச் சமன்பாடுகளில் பூர்வீகப் பிரபஞ்சத்தின் வடிவம் எத்தனை பெரியது என்பதைக் கணக்கிட முடியவில்லை. ஆகவே போஜோவால்டு கோட்பாட்டில் அத்தகைய “உறுதியில்லா ஊகிப்புகள்” (Uncertain Speculations) இருப்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    நான்கு வகுப்பு வடிவ நிலைகளில் பிரபஞ்ச அமைப்புகள்

    “பல்லரங்கப் பிரபஞ்சம்” அல்லது “மேல்நிலைப் பிரபஞ்சம்” (Multiverse, Multi-Domain Universes or Meta-Universe) என்பது நிகழக் கூடிய பல்வேறு இணைப் பிரபஞ்சங்கள் பற்றிய ஓர் சித்தாந்தப் பௌதிகக் கோட்பாடு (Hypothesis of Possible Multiple Universes). அதனுள் நாம் வாழும் பிரபஞ்சமும் அடங்கும். அது ஒரு பௌதிக விஞ்ஞான மெய்ப்பாடுதான் ! பற்பல பிரபஞ்சங்களின் கட்டமைப்புகள் (Structures of the Multiverse), ஒவ்வொரு பிரபஞ்சத்தின் இயல்பான பண்பாடு (The Nature of Each Universe), பல்வேறு பிரபஞ்ச உட்பண்டங்களின் உறவுப்பாடு (The Relationship between the Constituent Universes), ஆகியவை குறிப்பிட்ட பிரபஞ்சத்தின் சித்தாந்த பௌதிகக் கோட்பாடைச் சார்தவை. “Multiverse” என்னும் சொல்லை ஆக்கியவர் அமெரிக்க வேதாந்தி வில்லியம் ஜேம்ஸ் (1848-1910). அவற்றை (Alternate Universes, parallel Universes, Quantum Universes, Parallel Worlds, Alternate Realities & Alternate Timelines) என்றெல்லாம் குறிப்பிடுகிறார்கள்.

    பல்லரங்க பிரபஞ்சங்கள் வகுப்பு -1, வகுப்பு -2, வகுப்பு -3 & வகுப்பு -4 (Level I, Level II, Level III & Level IV) என்று நான்கு வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் வகுப்பு முறைகளை ஆக்கியவர் மூவர் : 1. ஜியார்ஜ் எல்லிஸ் (George Ellis). 2. யு. கெர்ச்செனர் (U. Kirchner) & 3. டபிள்யு. ஆர். ஸ்டோஜர் (W.R. Stoeger). அப்பிரிவு முறைகளுக்கு “டெக்மார்க் வகுப்பியல்” (Tegmark Classification) என்பது பெயர்.

    1. பல்லரங்க பிரபஞ்சங்கள் (Multi-Domain Universes)

    வகுப்பு : 1 (திறந்த வெளிப் பிரபஞ்சம்)

    யுகங்கள் கடந்த பிரபஞ்சத்தின் எல்லையிலா அகிலவெளி வீக்கம் பற்றி ஒரு பூர்வீக முன்னறிவிப்புச் சித்தாந்தம் இது. அதனில் ஆதிகால நிபந்தனைகள் எடுக்கப்பட்டு ஹப்பிள் தொலைநோக்கி காணமுடிந்த கொள்ளளவுகள் இருக்க வேண்டும்.

    (Level : 1 A Generic Prediction of Cosmic Inflation is an infinite Ergodic Universe which, being infinite, must contain Hubble Volumes, realizing all initial conditions)

    2. வேறுபட்ட பௌதிக நிலைத்துவம் கொண்ட பிரபஞ்சங்கள் (Universes with Different Physical Constants)

    வகுப்பு : 2 (ஆன்ரி லிண்டேயின் குமிழ் நியதி) (Andrei Linde’s Bubble Theory)

    கொந்தளிக்கும் அகிலவெளி வீக்கத்தில் வெப்ப அரங்கங்கள் பரிமாணவியல், நுண்துகள் இருப்புகளுடன் வேறுபட்ட, வளப்பூட்டும் பௌதிக நிலைப்பாடுகள் அடைவது.

    (Level : 2 In Chaotic Inflation other Thermalized Regions may have different Effective Physical Constants Dimensionality & Particle Content. Also it includes Wheeler’s Oscillating Universe Theory)

    3. பல்வேறு பிரபஞ்சங்கள் (Multiverses)

    வகுப்பு : 3

    நுண்துகள் யந்திரவியலை விளக்கும் போது சமத் தோற்றம் கொண்ட ஆனால் மாறுப்பட்ட தன்மையுள்ள பல்வேறு பிரபஞ்சங்களைப் பற்றிக் கூறுகிறது. 2007 செப்டம்பரில் டேவிட் டாய்ட்ஸ்ட் (David Deutsch) பல்வேறு உலகங்களைப் பற்றி விளக்கமும் நிரூபணமும் அளித்தார்

    (Level : III An Interpretation of Quantum Mechanics that proposes of Multiple Universes which are identical but exist in possibly different States)

    4. முடிவான முழுத்தோற்றப் பிரபஞ்சங்கள் (Ensemble Theory of Tegmark – Ultimate Ensemble)

    வகுப்பு : 4 மற்ற கணித அரங்குகள் வெவ்வேறு அடிப்படைப் பௌதிகச் சமன்பாடுகளை உண்டாக்குகின்றன.

    (Level : IV Other Mathematical Structures give different fundamental Equations of Physics)

    காலமற்ற ஒரு பிரபஞ்சம் (A Timeless Universe) !

    அகிலத் தோற்றத்தைப் பற்றிய புதுக் கோட்பாடுகள் நமது பிரபஞ்சத்தைப் பல்வேறு பிரபஞ்சங்களில் ஒன்றாக இருக்கலாம் என்று கூறுகின்றன ! மேலும் “காலம்” என்று ஒன்றில்லை என்னும் புதியதோர் கருத்தும் விஞ்ஞானிகளிடையே தற்போது உலவி வருகிறது. அமெரிக்க விஞ்ஞானி லீ ஸ்மோலின் (Lee Smolin) ‘காலமற்ற பற்பலப் பிரபஞ்சக்’ (Timeless Mulitiverse) கருத்தை எதிர்க்கிறார் ! மற்ற பிரபஞ்சங்களில் ஒன்றான காலமற்ற நமது பிரபஞ்சத்தில் ‘பௌதிக விதிகள்’ (Laws of Physics) வெவ்வேறாக இருக்கும் என்று கருதப் படுகிறது.

    மூன்று புது விதப் பிரபஞ்சங்கள் இருக்கலாம் என்று சில விஞ்ஞானிகள் எண்ணுகிறார். முதலாவது ஒரே ஒரு பிரபஞ்சம் உள்ளது என்பது. பற்பல பிரபஞ்சங்கள் உள்ளன என்று காட்டுவது விஞ்ஞானப் புனைகதைகளே ! இரண்டாவது : காலம் என்பது மெய்யானது (Time is Real) மேலும் உணரப் படுவது (Time Exists) ! காலமற்ற பிரபஞ்சம் (Timeless Universe) உள்ளது என்பது தர்க்கத்துக்கு உரியது. மூன்றாவது : முந்தைய பிரபஞ்சம் முறிந்து மீளும் சேய்ப் பிரபஞ்சம்.

    தகவல்கள்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines. Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Big Bang Happen ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition -Exploring the Early Universe By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
    20 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40801101&format=html (பிரபஞ்சம் ஒன்றா ? பலவா ?)
    21 http://jayabarathan.wordpress.com/2009/01/09/katturai49/ (பெரு வெடிப்புக்கு முன் பிரபஞ்சத்தில் நேர்ந்தது என்ன ?)
    22 Big Bang Theory – The Premise
    23 Dark Energy – Universe Expansion Discovered.
    24 The Ultimate Fate of the Universe (Wikipedea) (Sep 9, 2009)
    25 Time May not Have a Beginning & it might not Exist at all -Three Theories That Might Blow up the Big Bang Theory [March 25, 2008]
    25 Expanding Universe, Multiverse & Timeless Universe (June 2, 2009)
    26 The Question of the Beginning & the End of the Universe (June, 2006)
    27 Scientific American – Origin of the Universe (September 2009)
    28 Daily Galaxy : Will the Laws of Physics Extend Beyond our Universe (August 29, 2009)
    29 Wikipedia -The Life of Cosmos & The Trouble with Physics By: Lee Smolin (September 4, 2009)

    Source: http://www.classle.net/print/32771

  8. சௌந்தரபார்வதி says:

    பிரபஞ்சம் எத்தகைய வடிவமுடையது என்ற கேள்வி சற்று சிக்கலனாது. எனினும் இதுவரை அறிவியலார் மேற்கொண்டுள்ள ஆய்வுகளினின்று மூன்று வடிவங்கள் பற்றிக் கருத்துரைத்துள்ளனர். அவை கோள வடிவான மூடிய பிரபஞ்சம், சமதளப் பிரபஞ்சம், பரவளை வடிவப் பிரபஞ்சம் என்பனவாகும். கோள வடிவான மூடிய பிரபஞ்சம் எல்லையற்றது. ஆனால் அளவிடக் கூடியது. இப்பிரபஞ்சத்தில் மையமோ அல்லது விளிம்புகளோ கிடையாது. ஆனால் சமதள மற்றும் பரவளை வடிவப் பிரபஞ்சம் எல்லையற்று எல்லாத் திசைகளிலும் பரந்துள்ளது. இதற்கும் விளிம்போ, மையமோ கிடையாது. இப்பிரபஞ்சத்தின் வயது என்ன என்பதை இதுவரை துல்லியமாகக் கணக்கிட முடியவில்லையாயினும் தோராயமாக 1800 கோடி ஆண்டு வயதுடையது. என (இதுவரை நம்மால் முடிந்த ஆய்வுகளினின்று) அறிவியலார் கணக்கிட்டுள்ளனர். எல்லாம் அடங்கியுள்ள பிரபஞ்சம் 1000 கோடி ஒளி ஆண்டுகள் விட்ட முடையது என ஒருவாறு ஊகிக்கிறார்கள்.

  9. என்னைப்பொருத்த வரை பெருவெடிப்பு எனும் big bang எனபது ஆர்ம்ம்பம் அல்ல அது ஒரு தொடர்ச்சியே. பிரபஞ்சத்தின் ஆர்மபத்தை அறிய வேண்டுமா தொடர்ந்து பாருங்கள்
    http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.com

  10. Great review! You actually touched some valuable news on your blog. I came across it by using Bing and I’ve got to admit that I already subscribed to the RSS, it’s very great 🙂

  11. free ipad 2 says:

    Great review! You actually covered some interesting things on your blog. I came across it by using Google and I’ve got to admit that I already subscribed to the site, will be following you on my iphone 🙂

எப்பொருளையும் பற்றி மேலும் நீ அறியக்கூடியதெவை?